Thursday, January 7, 2021

ஏன் தெரிவதில்லை? (Iraivan namakku en terivadillai?)

மூலம்: ஸ்ரீநிவாஸ ஐயங்கார்

தமிழாக்கம்: வனஜா



அர்ஜுனனுக்கு உபதேசிக்கையில் ஸ்ரீ க்ருஷ்ணன்  கூறினான், "ஓ அர்ஜுனா ! தன் மாயையால் அனைத்தையும் கட்டுப்படுத்தும் இறைவன் அனைத்து உயிரினங்களின் உள்ளத்துள்  உறைகின்றான்". இதன் மூலம் இறைவன்  நம் அனைவரின் உள்ளத்தும் உள்ளான் என அறியலாம். உடலினுள்  இதயம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அவன் அங்கு வாழ்வதை எவ்வாறு காண்பது? நம் இதயம் உட்புறம் இருக்கையில் கண்கள் வெளிப்புறம் உள்ளன. முரண்பாடாக  திறந்த இதய (open heart surgery)அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கும் புலப்படுவதில்லை.


அனுபவபட்டவர்களின் கூற்றுப்படி நம் உடலை ஒரு ரதத்திற்கு ஒப்பிடலாம்.  மானிடதேர் (நர-ரதம்) எனப்படும். நரன் என்பது ஜீவன். இம்மானுடத்தேர்,   இந்த ஜீவன் மற்றும் அந்த  ஜீவனுக்கு  வழிகாட்டியாகவும், குறிக்கோளாகவும், அடைய வேண்டிய இலக்காகவும் உள்ள நாராயணனையும் உள்ளடக்கியுள்ளது. இதயம் என்பது ஜீவனும், தேவனும்  இணையும் பகுதியாகும். ஆயின் ஜீவனும் தேவனும்  நம் உடலினுள் உறைவதை எவ்வாறு நம்புவது?  இறைவன்  நம் உள்ளே இருப்பினும் நமக்கேன் தெரிவதில்லை என்றால் நாம் அதன்பால் கவனம் செலுத்துவதில்லை. ஸ்ரீரங்கமஹாகுரு இத்தன்மையை ஒரு அழகிய உவமையோடு விளக்கியுள்ளார்.  தன் பணிகளில் ஆழ்ந்திருக்கும் ஒருவன் இயற்கையாக ஏற்படும் பசி, தூக்கத்தை கூட உணர்வதில்லை. அன்றாட வேலைகளுக்கிடையில் உடல் தன் பசியை உணர்த்தினாலும் வேலை பளுவின் காரணமாக அதை கவனிப்பதில்லை அல்லது புறக்கணிக்கிறோம். அவ்வாறே இரவுநேர திரைகாட்சியின் போது  தூக்க கலக்கமடைந்தாலும்  அதை லட்சிப்பதில்லை.  இவ்வாறு புறக்கணிப்பதையே பழகி கொண்டால் பசியும், தூகமும் குறைய தொடங்கும்.


புலன்களுக்கும் உலக இன்பங்களுக்கும் அடிமைப்பட்டு ஆத்மாவின் பசியை புறக்கணிக்கிறோம். எனவேதான் நம் உள்ளேயே இருக்கும் இறைவன் நமக்கு புலப்படுவதில்லை. நம் பார்வையை அவன்பால் செலுத்தவே மஹரிஷிகள் இப்புண்ணிய பாரதத்தில் அநேக ஆலயங்களை நிர்மாணித்தனர். ஒவ்வொரு   இல்லத்திலும் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய பதினாறு வகை ஸம்ஸ்காரங்களை(purifactoryrites) ஏற்படுத்தினர். ஜீவிகள் இறைவனை அடையும் வழிக்கு நேரும் இடையூருகளை நீக்கி வழிவகுக்க அநேக விதிகளையும், தடைகளையும்  விதித்துள்ளனர்.


பிறந்த சிசுவின் முன் மேல்நோக்கியுள்ள முக்கோணத்தை ப்ரதிபலிக்கும்  தீபம் ஒன்று வைக்கப்படுகிறது. கண்டாநாதம்(மணிஓசை) கேட்க வைக்கப்படுகிறது. அவ்வோசை ப்ரணவநாதத்தை ப்ரதிபலிக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் ஜோதி, நாதம்    இவற்றின் பால் ஈர்க்கப்பட்டு ஆயுள் முழுவதும் இறைவனை குறித்தே  இருக்க வழிவகுத்தனர். இன்று இக்கொள்கைகளனைத்தும் மறைந்து இறைவனும் நம் பார்வையிலிருந்து மறைந்து விட்டான். இங்கு ஸ்ரீரங்கமஹாகுருவின் வாக்கு கவனிக்கப்பட வேண்டியது - "நமக்கு விழிப்பு, உறக்கம், ஆழ்நிலை உறக்கம்    என்ற மூன்று நிலைகளுக்கு உரிமை உள்ளது போலவே இறைவனுடன் ஒன்றிணையும் நான்காவது நிலைக்கும் உரிமையுண்டு."


எல்லாம் வல்ல இறைவன் அவனை உணரும் வலிமையை நமக்கு அருளும்படி வேண்டுவோம்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.