Thursday, August 22, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 30 (Sriranga Mahaguru - 30)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 19 

இவர்களுக்கு ஏன் பீடமும் நமஸ்காரமும் ?
===========================================================

மூலம்: திரு. வரததேசிகாசார்யர்
தமிழாக்கம்: திருமதி வனஜா



ஆன்மீக பெரியோரையும் மகான்களையும் நாம் உயர்ந்த இருக்கையில் அமரச்செய்து  வணங்கி  உபதேசம் பெறுகிறோம். இப்பழக்கத்தை சிலர் இவ்வாறு மறுக்கின்றனர்.    
     
1. ஆன்மீக பெரியோருக்கு நம்மைவிட அதிகமான விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஞானிகளாகவும் இருக்கலாம்.  எனினும் அவர்களும் நம்போன்ற மானிடர்தானே? குத்தினால் அவர்கள் உடலிலிருந்து வெளிவருவதும் உதிரம் தானே? பாலல்லவே? 
     
அவர்கள் தம் சீடர்களுடன் நட்புடன் பழகி தாங்கள் அறிந்தவற்றை பகிர்தல் வேண்டும். தான் பெரியவனென்ற அகந்தையை துறந்து சீடர்களுடன் சமமான இருக்கையில் அமர வேண்டும். இவர்களுக்கு  சீடர்களை விட உயரமான இருக்கை ஏன்? என்பது முதல் கேள்வி.     

2. அனைவரிலும் பெரியவன் இறைவன் அல்லவா? அவனை  மட்டும் வணங்குவோம்.  பெரியவர்களை ஏன் வணங்க வேண்டும்? என்பது இரண்டாவது கேள்வி.      
        
இவற்றில் முதல் மறுப்பு மிகவும் சாதாரணமானது. அமர்வதற்கு நிறைய இருக்கைகள் இல்லாத பொழுது ஆசார்யனும் சீடர்களுடன்  வெளிப்பார்வையில் சமமான இருக்கையில் அமரக்கூடும். ஆயின் உண்மையில் அவர் எல்லோரையும்விட  உயர்ந்த ஞானஇருக்கையிலேயே அமர்ந்திருக்கிறார். ஞானம் அனைத்திலும் சிறப்பானதால் அதனை ப்ரதிபலிக்கும் ஆசார்யருக்கும் உயர்ந்த இருக்கையை அளிப்பதே சரியாகும்.  அதுவே ஆசார்யர் சீடர் இருவருக்குமே மதிப்பளிக்கும். சிறப்பான மெய்யறிவு, அதனை அடைய வேண்டுமென்ற தூய்மையான மனம் இவையிரண்டிற்கும்  தகுதியான இருக்கை அளித்து  கௌரவிக்க வேண்டும். ஞானமுள்ளவனுடைய  தகுதி ஞானமற்றவனுடைய  தகுதியைவிட  உண்மையிலேயே மேலானது. ஆசார்யன் இறைவனின் வடிவே ஆகின்றான் என்று ஸ்ரீசங்கர பகவத்பாதர் கூறுகின்றார். வயது, அனுபவங்களில் முதிர்ந்தவர்களுக்கும் கூட மேலான இருக்கையே அளித்தல் வேண்டும்.

இரண்டாவது மறுப்பிற்கு  சிறிது ஆய்வு தேவைபடுகிறது. இறைவன் எல்லோரையும்விட உயர்ந்தவன். எல்லா ஆசார்யர்களுக்ககும் மூத்த ஆசார்யன் என்பதில் ஐயமில்லை.

ஆயின் அத்துணை சிறப்பான  இடத்திற்கு தம் வணக்கத்தை செலுத்தும் தகுதி இல்லாதவர்கள் தாமே நேரடியாக அர்ப்பணித்தால் அது தன் இலக்கை அடைவதில்லை.  ஆசார்யனுக்கு அர்ப்பணித்தால் அவர் அதனை இறைவனிடம் சேர்த்து அவனுடைய அருள்ஆசியை சீடன்பால் பெருகவைக்கிறார். எனவே பாமர மக்களுக்கு இத்தகையதோர்  நடுவர் தேவை.

வணக்கத்தை  நேரடியாக இறைவனுக்கு அர்ப்பணிக்க வல்லவர்கள் அரிது. அத்தகையவர்களுக்கு இடையில் ஒருவரும் தேவையில்லை. ஆயினும் அவர்கள் இறைவன் எல்லோருள்ளும் உறைந்திருப்பதை உணர்ந்து பெரியோரையும் மெய்யடியார்களையும் வணங்கி  உலக வழக்கத்தை காப்பாற்றுகிறார்கள். வணங்குவது உள்உறையும் கோவிந்தனையன்றி மனிதனையல்ல.