Showing posts with label 941_ayvmarticle. Show all posts
Showing posts with label 941_ayvmarticle. Show all posts

Thursday, September 1, 2022

ஸ்ரீகுருவின் கண்ணோட்டம் - 23 நம் வாழ்க்கையின் வேர் (Nam Vaazhkaiyin Ver)

  

மூலம்: வரததேசிகாசார்யர்
தமிழாக்கம்: ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


கடவுளை நம்பியவர்க்கும் நம்பாதவர்க்கும் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கைக்கு தேவையான உணவு, நீர் சுக போகங்கள் இருவருக்கும் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் இருக்கலாம். இவ்வாறிருக்க கடவுளை நாம் ஏன் நம்ப வேண்டும் என விமர்சகர் ஒருவர் மஹா குருவை வினவினார்.

ஶ்ரீகுரு: நாம் நம்பினாலும் நம்பாவிடினும் இறைவன் உள்ளான். நம் நம்பிக்கை அல்லது அவநம்பிக்கையால் அவனுடைய  இருப்பில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆயினும் இறைவன் இருப்பதை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல் நம் வாழ்க்கை இருப்பின் நமக்கு அதனால் மிகப்பெரிய லாபமுண்டு. அவ்வாறு இல்லாவிடில் பெருங்கேடு.

விமர்சகர்: அவநம்பிக்கையால் என்ன கேடு விளையும்?

ஶ்ரீகுரு: இறைவன் நம் அனைவருக்கும் முதன்மையானவன். வாழ்வெனும் மரத்திற்கே மூலமானவன். அனைத்து விதமான சுகம், சாந்தி மற்றும் பிரகாசத்திற்கும் மூலமானவன். இவ்வாறு அனைத்திற்கும் மூலமாக திகழும் அப்பொருளையே சாஸ்திரங்கள் இறைவன் என்றழைக்கின்றன. அம்மூலத்தை அறியாவிடில் என்றாவது ஓர்நாள் நாம் அபாயத்திற்கு ஆளாக நேரிடும்.

விமர்சகர்:  அது எவ்வாறு? மூலத்தை அறியாவிடில் என்ன அபாயம்?

ஶ்ரீகுரு:  ஒரு மரத்தின் மூலத்தை(வேர்) தெளிவாக அறியாது அதன் கிளைகளுக்கு மட்டும் நீர் ஊற்றி வந்தால் ஓரிரு நாட்கள் பசுமையாக கண்டு பின் அம்மரம் வாடிவிடுமல்லவா?அவ்வாறே வாழ்க்கை எனும் மரத்தின் வேரை, பரமாத்மனை உணராத அஞ்ஞானியின் ஜீவனமும் சுகம், சாந்தி, பிரகாசமற்று ஒளியிழந்து காணப்படும்.

விமர்சகர்: அவ்வாறாயின் அம்மூலம் எனும் பரமாத்மனை அறிவதால் ஏற்படும் ஆதாயம் என்ன?

ஶ்ரீகுரு: அதன் விடை மிகவும் தெளிவாகவே உள்ளது. வேரை அறிந்து அதற்கு தேவையான நீரை ஊற்றி வந்தால் மரம் என்றென்றும் பசுமையாகவே விளங்குவது போன்று நம் வாழ்க்கையின் வேரை, இறைவனை அறிந்து நம் பக்தி எனும் நீரை அர்பணித்தால் வாழ்க்கை நித்யமான சுகம், சாந்தியுடன் கூடி ஒளிமயமாக விளங்கும்.