Showing posts with label youtube_link_https://youtu.be/lvKTJAmCUso. Show all posts
Showing posts with label youtube_link_https://youtu.be/lvKTJAmCUso. Show all posts

Thursday, August 26, 2021

தீர்த்தம்-ப்ரசாதம் (Tirtham-Prasaadam )

மூலம் : தாரோடி சுரேஷ்

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



நாம் பொதுவாக தீர்த்தம் என்றால் பூஜையில் இறைவனின்   அபிஷேகத்திற்கு  உபயோகிக்கும் புனித நீர் என்று கருதுகிறோம். நாம் கங்கை முதலிய நதிகளையும் புனிதமானதாக வணங்குகிறோம். அதே போன்று இறைவனுக்கு அர்ப்பணிக்கும் நைவேத்தியங்களை அவரின் பிரசாதமாக  கருதுகிறோம்.


         உதாரணமாக. சர்க்கரை கலந்த கொப்பரை, தேங்காய், அன்னம் முதலியவை இறைவனுக்கு படைத்தபின் ப்ரசாதமாக கருதப்படும். அர்ச்சிக்கப்படும் பூக்களும். புனிதமாக கருதப்படும். வயதில் முதிர்ந்தவர்களை கடிதத்தில் குறிப்பிடுகையில் 'தீர்த்த ரூபர்(மதிப்பிற்குரியவர்)' என அழைக்கும் பழக்கம் சிறிது காலத்திற்கு முன்பு வரையில் இருந்தது.


         சுவாரஸ்யம் என்னவெனில்,   கடையிலிருந்து வாங்கும்போது தேங்காய் என்கிறோம். ஆயின்  பூஜைகக்குப்பிறகு நிவேதனமாக கருதப்படுகிறது. முதலில் சாதாரண தண்ணீரானது பூஜைக்குபின் (தீர்தம்)புனித நீராகிறது. எனினும் விஞ்ஞானம் அதனை பூஜைக்கு முன்னும், பின்னும் h2o என்றே கருதும். அதே போன்றே நாமும் பூஜையில் அர்ப்பணிக்கு முன்னும், பின்னும் அப்பொருளில் எந்த வேறுபாட்டையும் காண்பதில்லை.


            தீர்த்தம் எனும் வடமொழி சொல் 'த்ரு' எனும் தாதுவிலிருந்து வந்தது. அதன் பொருள் 'கடப்பது', 'கடக்கவைப்பது' என்பதாகும். .தீர்த்தம் என்பது ஒருவரை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு  அழைத்து செலவது தீர்தம் எனப்படும். 


      அவ்வாறாயின் நாம் எங்கு சென்றடைய வேண்டும்? நம் குறிக்கோள் யாது? இக்குழப்பத்திற்கு ஞானிகளின் அறிவுரை யாதெனில் நம் அறியாமையை ஒழித்து ஞானத்தை அடைதல் வேண்டும். இருளை விலக்கி இறைஒளியில் ஒன்ற வேண்டும். உலக இன்பங்களில் திளைப்பதை விடுத்து ஆத்மபோதம் எனும் இறைஒளியில் மூழ்க வேண்டும். ஞானிகள் தங்களின் அனுபவத்தில் உணர்ந்து உறுதியாக கூறுவதாவது யாதெனில் அவ்விதம் அடையும் பேரின்பம் புலன்களுக்கு அப்பாற்பட்டது. உலக இன்பங்களுடன் ஒப்பிடுகையில். அதனினும் மிக உயரியது, சிறந்தது. தீர்த்தம் என்பதன் பொருள் அறியாமையாகிய உலக இன்பங்களில் உழலும் நிலையிலிருந்து தூய ஆத்ம போத நிலைக்கு மாற்ற வல்லது.


           தீர்த்தத்தில் உள்ள புனித தன்மையை நாம் ஏன் புரிந்து கொள்ள இயலவில்லை? என்னும்  வினா எழுகிறது. ஒரு குறிப்பிட்ட முறையில் பயிற்சியும், உள்ளுணர்வும் இதற்கு தேவை. நம் உடல் என்னும் இயந்திரம் திறம்பட இயங்கவேண்டும். ஜலதோஷம் ஏற்பட்டால் முகரும் தன்மையை இழக்கிறோம். காய்ச்சலில் நாவில் சுவையை உணர இயலாது. அதே போன்று நம் மனதின் தூர்வாசனைகளால்  உடலிலுள்ள  இறைவனை உணர்த்தும் தகுதி பெற்ற மைய புள்ளிகள் அடைக்கப்பட்டு விடுவதால் நம்மால் தண்ணீர் தீர்த்தமாக மாறுவதன் பின்னுள்ள தத்துவத்தை புரிந்து கொள்ள இயலுவதில்லை. நாம் இத்தடையை நீக்குவதற்கான சரியான சிகிச்சை முறையை மேற்கொண்டால் நம்மாலும் தீர்த்தத்தில் விரவியுள்ள இறைதன்மையை உணர இயலும்.


ஆயின் ரிஷிகள் சூட்சுமமான உள்ளுணர்வு படைத்தவர்களாதலால்  சோதித்து அறிந்தனர். அவ்வாறே, தீர்த தன்மை உள்ள மற்ற பொருள்களையும்  சோதித்து அறிந்து அவைகளையும் தீர்தம் என்றே  அழைத்தனர். அநேக நதிகளும், மரங்களும், சாளக்ராமங்களும் தீர்தங்களே. ஜ்ஞாநிகளான பெரியவர்களும் தீரதஸ்வரூபரே ஆவர்.    பதார்தங்களுக்கு தீரத்த தன்மை வருவது  ஜ்ஞானிகளின் பார்வை,  தொடுதல் மற்றும் சங்கல்பத்தினாலே. இவர்கள் தாமும் அனுபவித்து பிறறையும் (பிறவிக்கடலை) தாண்ட வைக்கின்றனர். ஆதலால் தான் 'ஜ்ஞானிகள் தீர்த்ததன்மை அளிப்பவர்கள்' எனும் சொல்வழக்கு.  


உண்மையில் இறைவனே முதன் முதலான தீர்த்தம். அவனுடைய தர்மம் மற்றவர்களிடம் எத்துணை நிறைந்துள்ளதோ அவ்வளவிற்கு அவர்கள் தீர்த்த ஸ்வரூபராகின்றனர். 


பொருள்களை இறைவனுக்கு நிவேதனம் செய்யும்போது ஜ்ஞானிகள் அவனுடைய உணர்வை தம்முள் நிறைத்துக்கொண்டு நைவேத்யபொருள்கள் மீதும் அவ்வுணர்வை பெருகவிடுகின்றனர். அப்பொழுது அது பிரசாதம் ஆகிறது. 


அதனை உட்கொள்ளும் பக்தர்களுக்கு அது காலப்போக்கில் இறைவனை காணும் தகுதியை ஏற்படுத்துகிறது. சில பொருள்களில் இக்குணம் இயற்கையாகவே உள்ளது. உதாரணமாக ஸாளக்ராமம், துளசி, அருகம்புல் முதலியவை. தீர்த்தம், பிரசாதம் இவ்விரண்டும் நம் உடல், மனம், புலன்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி  நம்மை தாண்டவைக்கின்றன.

     

இவ்விஜ்ஞாநத்தை அறிந்து பக்தியுடன் ஏற்றுக்கொண்டால் தீர்த்த-பிரசாதங்கள் நம்மை முதல் தீர்த்தமான இறைவனிடம்  சேர்க்கும். 


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.