Tuesday, December 28, 2021

ஒப்பற்ற மஹாபுருஷர் ஶ்ரீரங்கமஹாகுரு - பாகம் -1 (Oppatra Mahaapurushan Srirangamahaa Guru - Part - 1)

திரு எஸ்.வி.சாமு அவர்களின்  மூலகன்னட புத்தகத்தின் ஒரு பகுதி

தமிழாக்கம்:  ஶ்ரீமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




ஶ்ரீரங்க ஸத்குரவே நம:


நமது ஸனாதன  பரம்பரை அநேக ஸாதுக்களையும், யோகிகளையும்  கண்டுள்ளது. ஶ்ரீரங்கமஹாகுரு என்ற மஹான் நமது பாரதம் கண்ட அத்தகைய மஹான்களில்  அபூர்வமும், ஒப்பற்றவருமான  ஒரு  யோகி. மேருவைப்போல உயர்ந்த அசாதாரணமான குணநலன்களை கொண்டவராக விளங்கியவர். அவர் அந்த பெயரே கூறுவது போல ஓர் ஞான புருஷனாக திகழ்ந்தார்.


.         ஶ்ரீரங்க மஹாகுருவானவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து எளிமையான உலகவாழ்க்கை நடத்தினார். அவரது யோகமஹிமையானது இலை மறைவிலுள்ள காய்போல் உலகத்தின்  கண்களுக்கு புலப்படாது  திகழ்ந்தது.  அசாதாரணமான அத்யாத்ம ஸித்தியை தான் அடைந்தது மட்டுமன்றி அதை விரும்பி தன்னை நாடி வந்தவர்க்கும்  அதை அருளிய ஒப்பில்லாத மஹா புருஷர். உலகில் ஞானிகள் தோன்றினாலும் அவர்களுடனேயே அந்த ஞானமும் மறைந்து விடுவதை நாம் காண்கிறோம். ஆனால் இம்மஹான்  அருளிய ஞானம், வித்யை, கலை முதலியவை அவருடன் மறையவில்லை. தான் கண்ட பரம்பொருளை  பிறரும் கண்டு அனுபவிக்கும்படி செய்யும் சாமர்த்யமுள்ளவராக விளங்கினார். நம் சம காலத்தில் பெங்களூரில். 


வாழ்ந்து சமூகத்தில் அனைவரையும் ஊக்குவித்த  ஶ்ரீ ஶ்ரீரங்கப்ரியஸ்வாமிகளின் குருவும் இவரே. அவர்போன்ற  அநேக மஹனீயர்களுக்கு பரிசோதித்து அறியக்கூடிய  பாரத கலாச்சாரத்தின் உண்மையும், முழுமையுமான அறிமுகத்தை  அளித்தார் ஶ்ரீரங்கமஹாகுரு. அனைத்து  வித்யைகளும், கலைகளும் எவ்வாறு இறைவனிடமிருந்து மலர்ந்தன மற்றும் அவைகளை அறிந்து உணர்ந்து உபாசித்தால் அவை ஸாதகனை அந்த இறை ஒளியிடமே  அழைத்து செல்லும் என்பதை நிரூபித்த பெருமை   இவருடையது.


                அவருடைய இத்தகைய கண்ணோட்டத்தை கண்டு கொண்டது அவருடைய  சிஷ்ய சமூகம் ஆனாலும்  அவருடைய இந்த விசாலமான கண்ணோட்டம் பாரத தேசம் மட்டுமே அல்லாது உலகிற்கே பரம மங்களமான ஒரு வழிகாட்டியாக உதவுகிறது.

    

 (தொடரும்)