Thursday, November 11, 2021

இலக்கிலிருந்து தவறுவது சுலபம் (Ilakkilirundu Tavaruvadu Sulabam)

முலம் கே.ஆர். ராகவேந்த்ர உராள்

தமிழாக்கம்: ஸி. ஆர். ஸ்ரீதர்

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



ஒரு சிறிய குடும்பம் கடலோரத்தில் வசித்து வந்தது. அக்குடும்பத்தினர் விடியற்காலை எழுந்து கடலில் மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். மதிய வேளைவரை மீன் பிடித்து, அருகிலுள்ள சந்தையில் விற்று, உண்பதற்கு வீடு திரும்புவார்கள். உண்டபின் மாலை வரை கடற்கரையில் குடும்பத்தினரோடு இன்பமுடனும் மன அமைதியுடனும் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தனர்.


ஒரு முறை, தொலைவில் உள்ள  நகரத்தில் வசித்த ஒரு உறவினர் இவர்கள் வீட்டிற்கு வந்தார். அவர் இக்குடும்பத்தினரின் அன்றாட வாழ்க்கைமுறையை கவனிக்கத் தொடங்கினார். நகரத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக இரவு பகல்  பாராது உழைத்து வந்த அவருக்கு, இக்குடும்பத்தினர் மேல் அனுதாபம் பிறந்தது. அவர்களுக்கு ஒரு ஆலோசனை வழங்கினார்.


'நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டுள்ளீர்கள். நீங்கள் கேவலம் மதியம் வரை வேலை செய்வதால் சிறிதளவுதான் மீன்கள் கிடைக்கின்றன. ஒரு வேளை நீங்கள் மாலை வரை மீன் பிடித்து பெரிய சந்தையில்  விற்றால் அதிக அளவு பணம் கிடைக்கும். இவ்வாறு அதிக பணம் கிடைப்பதால் பிறகு நீங்கள் ஒரு பெரிய படகை வாங்க முடியும். அதனால் நீங்கள் இன்னும் ஆழ்கடலுக்கு சென்று, இன்னமும் அதிக அளவிலான மீன் பிடித்து உலகளவில் மீன் விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். அதைக்கொண்டு உங்களுக்கே சொந்தமாக ஒரு பெரிய பங்களாவை வாங்கி, உங்கள் குடும்பத்தினருடன் இன்பமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும்' என்று கூறினார். "இவ்வளவையும் செய்வது இன்பத்திற்காகவும் நிம்மதிக்காகவும் என்றால், நாங்கள் இப்பொழுதே அந்த இன்பத்தையும் நிம்மதியையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோமே?" என்று அவ்வீட்டார் ஆச்சரியத்துடன் வினவினர்.


இவ்வாறே, நம்முள்ளேயே ஐந்து உறவினர்கள் உள்ளனர். இவர்களே நம் ஐந்து புலன்கள். பல நேரங்கள் அப்  புலன்களின் ஈர்ப்புகள் நம்மை நம் வாழ்வின் உன்னதமான குறிக்கோளிலிருந்து தூரமாக்கிவிடுகின்றன. வாழ்வின் எல்லையில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் ஒளி வெள்ளத்துடன்  ஒன்றிணைவதே வாழ்வின் உன்னதமான இலக்கு என்று நம் நாட்டின் பண்டைய மஹரிஷிகள் பறைசாற்றி உள்ளனர். "எவ்வாறு நமக்கு இருபத்தியொரு வயது ஆனவுடன் ஓட்டு போடும்  தகுதி ஏற்பட்டுவிடுகிறதோ, அவ்வாறே  மனிதப் பிறப்பு வந்தவுடன் அந்த இறையனுபவ ஆனந்த நிலையை அடையும் தகுதியும் ஏற்பட்டுவிடுகின்றது" என்று ஸ்ரீரங்கமஹாகுரு  சுட்டிக்காட்டியிருந்தார்.


 இறைவனின் அருளால் மனிதப் பிறப்பு கிடைத்துள்ளது. இனி அந்த உன்னத இலக்கை நோக்கி அடி எடுத்து வைப்பதுதான் மிகுதியாயுள்ளது. ஆகையால், புலன்களுக்கு அடிமைகளாகி, அவைகளின் கவர்ச்சியால் வழி தவறாது, அப்புலன்களை நம் வசத்தில் வைத்துக்கொண்டு, அந்த உன்னதமான இலக்கை இந்த பிறப்பிலேயே சென்றடைவோம் என்னும் நம்பிக்கை வைப்போம்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.